Monday, May 28, 2012

இளவேனிற்கால நினைவுகள்

                                                                                                             
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிலிருந்து :

                            இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலம் (Spring) என்பது மிதவெப்பமண்டல இடங்களில் காணப்படும் நான்கு பருவ காலங்களில், குளிர்காலத்திற்கும், கோடைகாலத்திற்கும் இடையில் வரும் காலமாகும். புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் செப்டம்பர், க்டோபர், நவம்பர் மாதங்களிலும் இந்த பருவகாலம் குறிக்கப்படுகின்றது. 




                          தமிழ்நாட்டில் இளவேனிற்காலம் மார்ச் இறுதியில் ஆரம்பித்து ஏப்ரலில் தொடர்ந்து மேயில் முடிவடையும். இளவேனிற்கால மரங்கள் பூ பூக்கும் போதே மாணவர்கள் மனதும் பூ போக்க ஆரம்பித்து  விடும். முழுவருட பரீட்சை முடிந்து ஒரு முழுமாதம் எந்த வீட்டு பாடமும்  இல்லாமல்  விடுமுறையை அனுபவிக்கலாம். முழுபரிட்சை நடக்கும் போதே வீட்டில் அந்த வருட லீவுக்கு எந்த ஊருக்கு போவது என்கிற விவாதம் தொடங்கி விடும். எவ்வளவு விவாதம் நடந்தாலும் கடைசியில் நாங்கள் போவது கோவில்பட்டியாகவோ அல்லது பீர்மேடாகவோ  தான் இருக்கும். மொழிவாரி மாநில பிரிவுக்கு பின் கேரளாவுடன் சேர்க்கப்பட்ட பீர்மேடின் கதை எல்லாம் அப்போது எனக்கு தெரியாத வயசு. பெரியம்மா வீட்டின் அருகில் இருந்த ஒரு ஆற்றில் மீன் பிடித்ததும், முந்திரி காட்டில் சுற்றி விளையாடியதும் இன்றும் மறக்க இயலாத நினைவுகளே.  

                     எந்த ஊருக்கு லீவில் செல்வதென்றாலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இருப்பது வழக்கம். கோத்தகிரியில் இருந்து பஸ் மேட்டுப்பாளையத்தை தொடும் போதே  வெப்பத்தை உணர முடியும். ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தும் மனநிலை இருக்காது. கோவில்பட்டிக்கு செல்லும்போதெல்லாம் ஒரு புதிய அனுபவமாகத்தான் இருக்கும். காலையில் தென்னந்தோப்பில்  உள்ள பம்ப்செட்டில் 10 பைசா கொடுத்துவிட்டு தண்ணீரை வாரி வாரி அடித்து குளித்ததும், கண்மாய் கரையில் சைக்கிள் ஓட்டி பழகியதும் இன்றைக்கும் மனதுக்குள் நீங்காத நினைவுகளே. தினமும் நாராயணசாமி தியேட்டேருக்கோ ராமசாமி  தியேட்டேருக்கோ சென்று படம் பார்த்ததும் ஒரு தனி அனுபவம். பல புராண, வரலாற்று கதாபத்திரங்கள் எனக்கு அறிமுகம் ஆனது இங்கேதான்.

                   சில மாலைவேளைகளில் அரசு பொருட்காட்சிக்கும் செல்வோம். வெண்திரை ஒன்று கட்டி , ப்ரொஜெக்டர் வைத்து படம் காட்டுவதை வியப்புடன் பார்த்தவாறு  இருப்பேன். பொருட்காட்சிக்கு செல்ல முடிவு எடுப்பதே ஒரு சுவாரசியமான அனுபவம். சில அக்காமார்கள் அன்று பொருட்காட்சியில் போடபோகும்  படம் என்ன என்று துப்பறிந்து வந்து விடுவார்கள். அதை வைத்து ஒரு கூட்டம் பொருட்காட்சி பார்க்க கிளம்பிவிடும். இதில் அமோக ஆதரவு எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி படங்களுக்கே. ஜெமினி படத்துக்கும் கணிசமான ஆதரவு உண்டு என்றாலும் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி முன்பு அவர் தோற்பது உறுதி.

                    பகல் முழுவதும்  ஊரை சுற்றி வந்த அலுப்பில் இரவு உணவு சாப்பிடும் போதே கண்கள் சொருக ஆரம்பிக்கும். வெளி முற்றத்தில் நீர் தெளித்து குளுமை படுத்திய இடத்தில் அந்த காம்பௌண்டில் குடியிருக்கும் அனைவரும் தூக்கம் கண்களை தழுவ தழுவ ஊர் கதை பேசிக்கொண்டே தொங்க ஆரம்பிப்பதை இப்போது நினைத்து பார்த்தால் தொலைகாட்சி தொடர்களை ஒளிபரப்பும் விஞ்ஞான வளர்ச்சியை சபிக்கத்தான் தோன்றுகிறது.
                                    
                     எந்த ஊருக்கும் போகாத ஒரு மே மாதத்தில் தான் எனக்கு பாட புத்தகங்களை தாண்டி மற்ற புத்தகங்களின் அறிமுகம் கிடைத்தது. பள்ளிக்கூடமும் விடுமுறை. கூட விளையாடவும் ஆள் இல்லாமல் இருந்த ஒரு நாள் எங்கள் அப்பா எங்களை நூலகத்திற்கு அழைத்து சென்று நூலகரிடம் அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே எங்கள் அம்மா எங்களிடம் அம்புலி மாமா , பூந்தளிர் மற்றும் கோகுலம் புத்தகங்களை பற்றி கூறியிருந்ததால் நாங்களும் அந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தோம். அன்று ஆரம்பித்த புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. சிறுவர் புத்தகங்கள், ராணி காமிக்ஸ், லயன் ,முத்து, மினி லயன், திகில் காமிக்ஸ் என தொடர்ந்து, கிரைம் நாவல் , பாலகுமாரன் புத்தகங்கள் என வளர்ந்து விட்டது. இப்போதும் என்னால் புத்தகங்களுடனான உறவை முறித்து கொள்ள முடியவில்லை.

                   இளவேனிற்கால சரக்கொன்றை மரம் போல மனம் பூப்பூத்து கிடக்கும் மாதம் மே மாதம். வெளியே எவ்வளவு வெயில் அடித்தாலும் மனம் மட்டும் சிலிர் என்று சில்லிட்டு கிடக்கும் மாதம் மே மாதமே !!!

Monday, August 30, 2010

கங்கை கொண்ட சோழபுரம்

           இன்றைக்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை அறிந்து கொண்ட அளவுக்கு கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை மக்கள் அறிந்து கொள்ளவில்லை. சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை பயணம் (தஞ்சை பயணம் குறித்து வேறொரு பதிவில் சொல்கிறேன் ) மேற்கொண்ட போது கங்கை கொண்ட சோழபுரம் செல்ல நானும் என் நண்பனும் திட்டமிட்டோம்.

             அன்று ஆகஸ்ட் 14,2005. திங்களூர், திருவையாறு, சுவாமி மலை என்று சுற்ற ஆரம்பித்து அன்று மதியம்  கும்பகோணம் வந்து சேர்ந்தோம். மதிய உணவை கும்பகோணத்தில் முடித்து விட்டு எங்கள் பயணத்தை தொடங்கினோம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு. செல்லும் வழி எல்லாம் சோழ தேசத்தின் அழகு கண்ணை கவர்ந்தது. விரும்பிய இடத்தில் எல்லாம் புகைப்படம் எடுத்து விட்டு , கங்கை கொண்ட சோழபுரம் சென்று சேரும் போது மணி மாலை 4:30 ஆகிவிட்டது.

               தஞ்சையிலோ அல்லது மற்ற கோவில்களிலோ இருக்கும் கூட்டமோ அல்லது ஆர்பாட்டமோ இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்த கங்கை கொண்ட சோழபுரம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ராஜேந்திர சோழனின் காலத்தில் பரபரப்புடன் காணப்பட்ட சோழர் தலைநகரம் இன்று எந்தவித ஆர்ப்பட்டமும் இன்றி காணப்பட்டது. இதற்கு அந்த இடம் அமைந்துள்ள புவி அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அருகில் எந்த பெரிய நகரமும் இல்லை. இங்கு வரும் மக்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமே.

                    கோவிலின் நுழைவாயில்
                                        
             கை விடப்பட்ட நகரம் போல் காணப்பட்டாலும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் இந்த பகுதியை நன்கு பராமரித்து வருகின்றனர். பிரகதீஸ்வரர் கோவிலில் நுழைந்ததும் தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பது போன்றே ஒரு உணர்வு. ஆனால் தஞ்சை கோவிலில் இருக்கும் அந்த மூன்று நுழைவாயில்கள் இங்கு இல்லை. உள்ள நுழைந்ததும் பச்சைபசேல் என பராமரிக்கபடும் கோவிலின் சுற்றுபுறம் கண்ணை கவர்கிறது.

                        கோவிலின் சுற்றுப்புறம் , துர்க்கை அம்மன் கோவிலின் தோற்றம்

                 கோயிலின் உள்ளே சென்றோம். தஞ்சை கோவிலை போன்றே மிக பெரிய லிங்கம். என் நண்பன் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையில் நான் கோவிலின் மற்ற இடங்களை பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த கோவிலின் மற்றொரு அர்ச்சகர் அந்த கோவிலை பற்றி கூற தொடங்கினார்.

                    இராஜராஜனை  விட  இராஜேந்திரன் மிக பெரிய போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றாலும் அவன் தந்தையை மிகவும் விரும்பியதற்கு, மதித்ததற்க்கு இக்கோயில் ஒரு சான்றாகும். பல போர்களில் வென்றதை பறைசாற்ற தஞ்சை கிளை விட மிக பெரிய கிளை கட்ட பலர் வற்புறுத்தினாலும் தான் தந்தையை விட தான் உயர்ந்தவனல்ல என்பதை குறிக்கும் வகையில் தஞ்சை கோவிலை விட ஒரு அடி குறைவாகவே இக்கோவிலை கட்டினான் இராஜேந்திரன்.

                  கோவிலின் மற்றொரு புகைப்பட காட்சி 

                           இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு  இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது. இதன் சிறப்பு வெளிப்புற தட்ப வெப்ப நிலைக்கேற்ப மாறி கொள்ளும். வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாகவும், வெளியே குளிர்ச்சியாக இருக்கும் போது கர்ப்பகிரகம் வெது வெதுப்பாகவும் இருக்கும்.
      
                           கோவிலின் முற்புறம் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. சிறிய நந்தி இராஜேந்திரன் அமைத்தது என்றும் அதன் பின்புறம் உள்ள பெரிய நந்தி பிற்காலத்தில் வேறு யாரோ அமைத்தது என்றும் கேள்விப்பட்டோம். இராஜேந்திரன் அமைத்த நந்தியை குறித்த மற்றொரு சுவாரஸ்யமான செய்தி அந்த நந்தியின் காதில் உங்கள் விருபத்தை கூறினால் அந்த விருப்பம் நிறைவேறும் என்பது. என் நண்பனும் தான் விருப்பத்தை நந்தியின் காதில் கூறிவிட்டு வந்தான். (மறுநாள் நாங்கள் பூம்புகார் சென்று கொண்டு இருந்தபோது அந்த விருப்பம் நிறைவேறியதாக அவன் சொன்னது தனி கதை).

                                    இரு நந்திகள்     

                   கோவிலின் மற்றொருபுறம் அமைந்துள்ளது துர்கைக்கு என தனி கோவில். நிசும்பசூதனி என்ற துர்க்கையே சோழர்களின் குலதெய்வம். இராஜராஜனும், இராஜேந்திரனும் போருக்கு செல்லும் போதும் , போரை வென்று வந்த போதும் இத்துர்கையை வழிபட்டு வந்தனர்.

                 கோவிலின் கோபுர கலசம்.


                              இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலை நீங்களும் ஒரு முறை சென்று பாருங்கள். இக்கோவில் உங்கள் மனதையும் கொள்ளை கொள்ளும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

Thursday, August 19, 2010

போக்குவரத்து நெரிசலும் தனி மனித ஒழுக்கமும்




             வேலைக்கு செல்வதற்காக தினமும் நான் செய்வது 20 நிமிடத்திலிருந்து 1 மணி நேர பயணம். பயணம் செய்யும் வாகனத்தை பொறுத்து நேரமும் மாறும். ஆனால் மாறாத ஒரு விஷயம் சென்னை traffic. அதுவும் இந்த கோடை காலத்தில் பேருந்து பயணம் என்பது இந்த நகரத்தில் நரக வேதனை. பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் சொர்க்கம் என்பது ஜன்னலோர இருக்கையும் கிடக்கும் நேரத்தில் ஒரு சுகமான தூக்கமும். 

             என்னை பொறுத்தவரை எனக்கு பேருந்து பயணத்தில் சுகம் என்பது ஓட்டுனர் இருக்கைக்கு எதிர்புறம் முதல் seat இல் அமர்வது. அதற்காகவே வேளச்சேரி பேருந்து நிலையத்தில் காத்திருந்து பஸ் ஏறுவேன். வேளச்சேரியில் இருந்து DMS  செல்வதற்குள்  சாலையில் நான் பார்க்கும் நாடகங்கள் பல பல. அதிலும் ஒவ்வொரு நாளும் சென்னை traffic  சொல்லி முடியாது.

               ஆனால் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கிய காரணம் போக்குவரத்து விதி மீறலே. சாலை விதிகளை மதிக்காமல் செல்லவதை ஒரு சாகசம் போல் கருதும் ஒரு சாரார். சாலை விதிகளை மதித்து signal இல் நிற்பவன் கேட்க வேண்டிய கெட்ட வார்த்தைகள் பல பல. விதிகளை மதித்து நடப்பவன் பலரது ஏளன பார்வைக்கு உள்ளாவான் என்பதே இன்றைக்கு உள்ள நிதர்சனமான உண்மை.

                இந்த விதி முறை மீறல்கள் செய்பவர்கள் யார் என்று பார்த்தல் யாரோ சட்டம் தெரியாத பாமரன் அல்ல. நன்கு படித்த முட்டாள்கள் தான். தங்கள் படித்து விட்டதாலேயே தங்களுக்கு எல்லாம் தெரிந்ததாகவும் தங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற மனோ பாவத்துடனும் அலையும் மாகானுபவர்கள் தான் இந்த சிங்கார சென்னையில் அதிகம். இதன் காரணமாகவே விபத்தும் போக்குவரத்து நெரிசலும் அதிகம்.

               ஆட்டோவா அல்லது எமன் வாகனமா என்று நினைக்க தூண்டும் வகையில் அதை ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்கள்.  இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் என்று சொல்வார்கள். அது நூறு சதவீதம் இவர்களுக்கு பொருந்தும். சவாரி இருந்தால் சாலையில் பறப்பதும் இல்லாவிடில் சாலையில் நினைத்த இடத்தில் நிற்பதும்  ஊர்வதுமாக அவர்கள் ஏற்படுத்தும் நெரிசலும் சொல்லி முடியாது.

              சாலையை கடக்க தனி இடமும் subway யும் இருந்தாலும் எந்த விதிமுறையும் இல்லாமல் சாலையை குறுக்கே கடந்து விபத்தை ஏற்படுத்தும் மக்கள் ஒரு காரணம்.

              ஆனால் இது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. போக்குவரத்து விதி முறை மீறுவோரை க(த)ண்டிக்க வேண்டிய போக்குவரத்து காவலர் அதை செய்யாமல் ஒரு இளித்தவாயனை பிடித்து கையூட்டு பெறுவதிலேயே குறியாக இருப்பதும் ஒரு காரணம். அரசாங்கமும் ஒரு காரணம். குண்டும் குழியுமான சாலைகள். அதை சரிவர செப்பனிட முடியாத அல்லது விரும்பாத அரசாங்கம். அப்படியே மராமத்து வேலை செய்தாலும் நாலு நாளில் பூச்சிழந்து பல்லிளிக்கும் சாலைகள்.

             இந்த கட்டுரையின் ஒரு நோக்கமே இதை படிக்கும் நூற்றில் ஒருவர் தன்னை  திருத்தி கொண்டாலே போதும் என்பதே. முதலில் நாம் நம்மை சரிபடுத்துவோம். பிறகு அரசாங்கத்தையோ பிறரையோ சுட்டி காட்டுவோம். திருந்திய ஒரு தனி மனிதனால் ஒரு சமுதாயத்தை மாற்ற முடியும் .

Tuesday, January 12, 2010

பொங்கலோ பொங்கல்

" ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்ல" 
                      ஜாதி மதம்  கடந்து ஒரு இனம் கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல்.  ஆடி பட்டம் தேடி விதைச்சு தையிலே அறுவடை முடிச்சு உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பின் பயனை அனுபவிக்கும் ஒரே விழா. உழைக்க தன்வேலையில் தனக்கு உதவி செய்த உயிரினத்துக்கும் தன் நன்றியை தெரிவிக்கும் ஒரே இனம் தமிழினம்.



                       "பொல பொலன்னு விடியயிலே தல குளிச்சு
                            புத்தாட உடுத்திகிட்டு புது நெல்ல எடுத்துகிட்டு
                         பொங்க வச்ச பால் பொங்கல பாக்கையில
                              மனசெல்லாம்  மகிழ்ச்சி பொங்கி வரும் "
  
                      "புது அடுப்பு செஞ்சு வச்சு புது பான எடுத்து வச்சு
                          பச்சரிசி அச்சுவெல்லம் கருப்பட்டி சேத்து வச்சு
                       மங்களம் பொங்க பொங்கி வரும் பொங்க
                           பான பாத்து மனசெல்லாம் மகிழ்ச்சியாச்சு !!!"

Monday, January 14, 2008

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம் தேவையா என்றொரு கேள்வி இன்று எழுந்துள்ளது. இத்திட்டத்தால் தென் தமிழ்நாட்டிற்கு பயன் உண்டா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இதனை மத வாத சக்திகளும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்த முடியுமா என ஆராய தொடங்கி உள்ளன. ஆனால் தென் தமிழக சாமானியன் நிலை இன்றும் வேலை தேடி புலம் பெயரும் நிலையிலேயே உள்ளது. சேது சமுத்திர திட்டத்தால் எள்ளளவேனும் இந்நிலை மாறும் என்பது என் கருத்து.

Sunday, January 13, 2008

மாமல்லபுரம் கடற்கோவில்

பல்லவர் கால கலைத் திறமையின் தனி வடிவம் இந்த கடற்கோவில்.