இன்றைக்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை அறிந்து கொண்ட அளவுக்கு கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை மக்கள் அறிந்து கொள்ளவில்லை. சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை பயணம் (தஞ்சை பயணம் குறித்து வேறொரு பதிவில் சொல்கிறேன் ) மேற்கொண்ட போது கங்கை கொண்ட சோழபுரம் செல்ல நானும் என் நண்பனும் திட்டமிட்டோம்.
அன்று ஆகஸ்ட் 14,2005. திங்களூர், திருவையாறு, சுவாமி மலை என்று சுற்ற ஆரம்பித்து அன்று மதியம் கும்பகோணம் வந்து சேர்ந்தோம். மதிய உணவை கும்பகோணத்தில் முடித்து விட்டு எங்கள் பயணத்தை தொடங்கினோம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு. செல்லும் வழி எல்லாம் சோழ தேசத்தின் அழகு கண்ணை கவர்ந்தது. விரும்பிய இடத்தில் எல்லாம் புகைப்படம் எடுத்து விட்டு , கங்கை கொண்ட சோழபுரம் சென்று சேரும் போது மணி மாலை 4:30 ஆகிவிட்டது.
தஞ்சையிலோ அல்லது மற்ற கோவில்களிலோ இருக்கும் கூட்டமோ அல்லது ஆர்பாட்டமோ இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்த கங்கை கொண்ட சோழபுரம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ராஜேந்திர சோழனின் காலத்தில் பரபரப்புடன் காணப்பட்ட சோழர் தலைநகரம் இன்று எந்தவித ஆர்ப்பட்டமும் இன்றி காணப்பட்டது. இதற்கு அந்த இடம் அமைந்துள்ள புவி அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அருகில் எந்த பெரிய நகரமும் இல்லை. இங்கு வரும் மக்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமே.
கோவிலின் நுழைவாயில்
கை விடப்பட்ட நகரம் போல் காணப்பட்டாலும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் இந்த பகுதியை நன்கு பராமரித்து வருகின்றனர். பிரகதீஸ்வரர் கோவிலில் நுழைந்ததும் தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பது போன்றே ஒரு உணர்வு. ஆனால் தஞ்சை கோவிலில் இருக்கும் அந்த மூன்று நுழைவாயில்கள் இங்கு இல்லை. உள்ள நுழைந்ததும் பச்சைபசேல் என பராமரிக்கபடும் கோவிலின் சுற்றுபுறம் கண்ணை கவர்கிறது.
கோவிலின் சுற்றுப்புறம் , துர்க்கை அம்மன் கோவிலின் தோற்றம்
கோயிலின் உள்ளே சென்றோம். தஞ்சை கோவிலை போன்றே மிக பெரிய லிங்கம். என் நண்பன் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையில் நான் கோவிலின் மற்ற இடங்களை பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த கோவிலின் மற்றொரு அர்ச்சகர் அந்த கோவிலை பற்றி கூற தொடங்கினார்.
இராஜராஜனை விட இராஜேந்திரன் மிக பெரிய போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றாலும் அவன் தந்தையை மிகவும் விரும்பியதற்கு, மதித்ததற்க்கு இக்கோயில் ஒரு சான்றாகும். பல போர்களில் வென்றதை பறைசாற்ற தஞ்சை கிளை விட மிக பெரிய கிளை கட்ட பலர் வற்புறுத்தினாலும் தான் தந்தையை விட தான் உயர்ந்தவனல்ல என்பதை குறிக்கும் வகையில் தஞ்சை கோவிலை விட ஒரு அடி குறைவாகவே இக்கோவிலை கட்டினான் இராஜேந்திரன்.
கோவிலின் மற்றொரு புகைப்பட காட்சி
இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது. இதன் சிறப்பு வெளிப்புற தட்ப வெப்ப நிலைக்கேற்ப மாறி கொள்ளும். வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாகவும், வெளியே குளிர்ச்சியாக இருக்கும் போது கர்ப்பகிரகம் வெது வெதுப்பாகவும் இருக்கும்.
கோவிலின் முற்புறம் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. சிறிய நந்தி இராஜேந்திரன் அமைத்தது என்றும் அதன் பின்புறம் உள்ள பெரிய நந்தி பிற்காலத்தில் வேறு யாரோ அமைத்தது என்றும் கேள்விப்பட்டோம். இராஜேந்திரன் அமைத்த நந்தியை குறித்த மற்றொரு சுவாரஸ்யமான செய்தி அந்த நந்தியின் காதில் உங்கள் விருபத்தை கூறினால் அந்த விருப்பம் நிறைவேறும் என்பது. என் நண்பனும் தான் விருப்பத்தை நந்தியின் காதில் கூறிவிட்டு வந்தான். (மறுநாள் நாங்கள் பூம்புகார் சென்று கொண்டு இருந்தபோது அந்த விருப்பம் நிறைவேறியதாக அவன் சொன்னது தனி கதை).
இரு நந்திகள்
கோவிலின் மற்றொருபுறம் அமைந்துள்ளது துர்கைக்கு என தனி கோவில். நிசும்பசூதனி என்ற துர்க்கையே சோழர்களின் குலதெய்வம். இராஜராஜனும், இராஜேந்திரனும் போருக்கு செல்லும் போதும் , போரை வென்று வந்த போதும் இத்துர்கையை வழிபட்டு வந்தனர்.
கோவிலின் கோபுர கலசம்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலை நீங்களும் ஒரு முறை சென்று பாருங்கள். இக்கோவில் உங்கள் மனதையும் கொள்ளை கொள்ளும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
No comments:
Post a Comment